செய்திகள்
விபத்து

சத்தியமங்கலம் அருகே ஆம்னி பஸ்-லாரி மோதல்: 10 பேர் படுகாயம்

Published On 2019-10-03 10:31 GMT   |   Update On 2019-10-03 10:31 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆம்னி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
சத்தியமங்கலம்:

கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு சென்றது. 30 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

இந்த பஸ் நள்ளிரவு 12 மணியளவில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் மூலம் கிணறு பகுதியில் வந்த போது எதிரே சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் லாரி மற்றும் பஸ் டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  அக்கம் பக்கத்தினர் மற்றும் மற்ற வாகனங்களில் வந்தவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர்.

படுகாயம் அடைந்த 9 பேரையும் போலீசார் மீட்டு கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்தால் அப்பகுதியில் நள்ளிரவில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News