செய்திகள்
மரணம்

ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் பலி

Published On 2019-09-14 11:10 GMT   |   Update On 2019-09-14 11:10 GMT
ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

கோவை மாவட்டம் வடபாவை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 32). இவருடைய பாட்டி வீடு ஈரோடு கருங்கல் பாளையத்தில் உள்ள திருநகர் காலனி ராஜாஜி புரத்தில் உள்ளது. இதனால் பிரதீப் அடிக்கடி ஈரோடுக்கு வந்து செல்வது வழக்கம்.

அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் கருங்கல் பாளையம் திருநகர் காலனி கே.என்.கே ரோட்டில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்த போது மணிகண்டன் தனது நண்பர்களான பாலமுருகன், சுலைமான், முத்து உட்பட சிலருடன் அங்கு வந்தார். பின்னர் அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மட்டும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதீப்பின் தலை, முதுகு, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த பிரதீப் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரதீப் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை முடிவில் தான் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது போன்ற விவரம் தெரியவரும். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News