உலகம்
டெல்டா வைரஸ்

டெல்டாவுக்கு எதிராக தடுப்பூசிகளை விட இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பாக இருந்தது: அமெரிக்க ஆய்வில் தகவல்

Published On 2022-01-20 03:14 GMT   |   Update On 2022-01-20 03:14 GMT
நீண்ட கால பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி 33 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் உருமாறிய வகைகளான டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட வைரஸ்களும் உலகை அச்சுறுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலையின்போது டெல்டா வைரஸ் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து உலக நாடுகள் பலவும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த டெல்டா வைரஸ் அலையின்போது தடுப்பூசி செலுத்தியவர்களை விட, தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே அதிக பாதுகாப்பு வழங்கியதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.



இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:-

பிற வைரஸ்களை போலவே கொரோனா வைரஸும் தொடர்ந்து உருமாறி வருகிறது.  இதனால் தடுப்பூசி தரும் பாதுகாப்பு ஆற்றலும் தொடர்ந்து மாறுபட்டு வருகிறது. டெல்டா வைரஸ் அலை ஏற்பட்டபோது கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை விட, முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியே அதிக பாதுகாப்பை வழங்கியது.

இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. நீண்ட கால பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து அதிகம்.  கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதே பாதுகாப்பான உத்தி ஆகும். 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News