செய்திகள்
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்ற பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்:
சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக தாம்பரத்தில் ஏராளமான அரசு பஸ்கள் ஜி.எஸ்.டி. சாலையின் இரு பகுதிகளிலும் நிறுத்தப்பட்டதாலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் கார்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதாலும் ஒரே நேரத்தில் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அணிவகுத்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.