செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

மின் கட்டணம் செலுத்த 3 விதமான சலுகைகள்- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Published On 2021-06-11 02:51 GMT   |   Update On 2021-06-11 10:26 GMT
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள்தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
சேலம்:

சேலம் இரும்பாலை வளாகத்தில் 2-வது கொரோனா சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள்தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதல் முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை 85 சதவீதம் பேர் ஏற்றுள்ளனர். மீதி உள்ள 10 முதல் 15 சதவீதம் பேர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கும் தீர்வு காணப்படுகிறது.



மே மாதத்திற்கு முந்தைய மாத மின் கட்டணத்தை (ஏப்ரல் மாதம்) செலுத்தலாம். அல்லது வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம். தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 வாய்ப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எதை விரும்புகிறார்களோ? அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக டெபாசிட் எனப்படும் கூடுதல் வைப்பு தொகையும் பொதுமக்களிடம் வாங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
Tags:    

Similar News