செய்திகள்
கேரளாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 10க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது. மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 19 பேரை காணவில்லை.
நிவாரண முகாம்களில் சுமார் 4 ஆயிரத்து 8 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 286 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஆலப்புழாவில் 6 பேர், கோட்டயம், காசர்கோட்டில் தலா 2 பேர், இடுக்கியில் 5 பேர்,திருச்சூர், கண்ணூரில் தலா 9 பேர், மலப்புரத்தில் 58 பேர், கோழிக்கோட்டில் 17 பேர், வயநாட்டில் 14 பேர், பாலக்காட்டில் ஒருவர் என மொத்தம் 123 பேர் பலியாகினர்.