உள்ளூர் செய்திகள்
மழை

டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

Published On 2021-12-16 08:00 GMT   |   Update On 2021-12-16 09:19 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக இன்றும், நாளையும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 18, 19-ந்தேதிகளில் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

இன்று முதல் 20-ந்தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாக்கக்கூடும். இதன் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை பூமத்திய ரேகை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News