செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் இருக்கும்: எடப்பாடி பழனிசாமி

Published On 2020-12-29 17:02 GMT   |   Update On 2020-12-29 17:02 GMT
நாமக்கல் மாவட்டத்தில் இன்று பிரசாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக-வை விமர்சனம் செய்தும், அதிமுக அரசு செய்த சாதனைகளை கூறியும் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போன்றவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் பிரசாரத்தை தொடங்கி விட்டது. கடந்த 19-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பிரசாரம் முறைப்படி 27-ந்தேதி தொடங்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த பிரசார தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 6 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்கிறார். நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. வருகிற 4-ந்தேதி வரை இந்த பிரசாரம் செய்கிறார். முதலாவதாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு காரணம் அதிமுக ஆட்சிதான்

* இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கில் சிறந்த மாநிலமாக திகழ்வது தமிழகம்தான்

* எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு ஆட்சி மீது அவதூறு பரப்புகின்றனர்

* அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி

* திமுக வெற்றி பெற்றால் அராஜகம் அதிகரித்து விடும், மக்கள் நிம்மதியாக வாழ முடியாது

* திமுக குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக

* இன்றைய இளைஞர்கள் நாளை தமிழகத்தின் முதல்வராகலாம்

* 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும் வகையில் புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்

* மக்கள் நினைத்ததை நிறைவேற்றும் அரசு, அதிமுக அரசு 

* உயர்கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் 

* சுய உதவி குழுக்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது

* அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் இருக்கும்

* கடந்த கால தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக நிறைவேற்றியுள்ளது
Tags:    

Similar News