செய்திகள்
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள குத்தாம்பூண்டியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண்ணும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் ராஜ்குமாரும் (வயது 23) 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணிடம் ராஜ்குமார் உல்லாசம் அனுபவித்தார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். உடனே அவர், ராஜ்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் தனக்கு முதலில் வேலை கிடைக்கட்டும் என்றும், மேலும் தன்னுடைய தங்கைக்கு திருமணம் முடிந்ததும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ராஜ்குமார் காலம் கடத்தி வந்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணுக்கு 3 முறை ராஜ்குமார், மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதனிடையே அந்த பெண், தனது பெற்றோருடன் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுத்ததோடு அவரும், அவரது தந்தை ஜெயபால், தாய் யசோதா, அண்ணன் சதீஷ்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணையும், அவரது பெற்றோரையும் தகாத வார்த்தையால் திட்டி மிரட்டினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கடந்த 9.2.2015 அன்று விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், ஜெயபால், யசோதா, சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியதோடு ஜெயபால், யசோதா, சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.