காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: நாராயணசாமி
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள அரசு பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இது ஜனநாயக தேர்தல். மதவாத சக்திகளுக்கும், மதச்சார்பற்ற அணிக்கும் இடையிலான தேர்தல். நாங்கள் மாநில அந்தஸ்து, கடன் ரத்து செய்வது, மானியத்தை 40 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை பெற்றுத் தருவோம் எனக்கூறி பிரசாரம் செய்தோம்.
புதுவை வளர்ச்சிக்கு தேவையான வாக்குறுதிகளை அளித்துள்ளோம். இதனால் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். எதிரணி சந்தர்ப்பவாத கூட்டணி. தலைவர்கள் தனித்தனியே பிரசாரம் செய்தனர்.
பிரதமர், மத்திய மந்திரிகள் அவரவர் கட்சிக்கு பிரசாரம் செய்தனர். கூட்டணிக்காக வேலை செய்யவில்லை. பா.ஜனதா பணத்தை வைத்து ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அதிகார துஷ்பிரயோகம், பணபலத்துடன் தேர்தலில் செயல்பட்டுள்ளது. வருமான வரித்துறையை ஏவி விட்டது.
எதிர்கட்சி வேட்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையால் மிரட்டல் விடுத்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் இது. மக்களை பிரித்து புதுவையின் தனித்தன்மையை முடக்கும் பா.ஜனதா அணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.