செய்திகள்
கைது செய்யப்பட்ட நபர்கள்.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்- 2 பேர் சிக்கினர்

Published On 2019-10-14 17:02 GMT   |   Update On 2019-10-14 17:02 GMT
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம், பாம்பனுக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் நேற்று வனத்துறையினரும், வேட்டைதடுப்பு காவலர்களும் வனத்துறைக்கு சொந்தமான பைபர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாம்பன் கடல் பகுதியிலிருந்து மண்டபம் நோக்கி வந்த ஒரு மீன் பிடி படகை நிறுத்தி சோதனை செய்ய வனத்துறையினர் முயன்றனர். ஆனால் வனத்துறையினரை கண்டதும் படகில் உள்ளவர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றனர். வனத்துறையினர் அந்த படகை துரத்திப்பிடித்து படகில் இறங்கி சோதனை செய்தனர்.

இதில் அந்த படகில் 63 சாக்கு மூட்டைகளில் சுமார் 3200 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அதைத் தொடர்ந்து கடல் அட்டைகள் மற்றும் அந்த மீன் பிடி படகை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடல் அட்டைகளுடன் வந்த வேதாளையை சேர்ந்த சாகுல்ஹமீது (வயது 31), கருப்பையா (45) ஆகிய 2 பேரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி கடல் அட்டைகளுடன் பிடிபட்ட 2 பேரையும் ராமநாதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டதுடன் கடல் அட்டைகளையும் அழிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடல் அட்டைகள் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

விசாரணையில், கடல் அட்டைகள் அனைத்தையும் வேதாளை பகுதிக்கு கொண்டு சென்று அங்கு பதப்படுத்தி பேக்கிங் செய்து படகு மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

வனத்துறையினரால் பறிமுதல் செய்பட்ட 3,200 கிலோ கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகி்றது.
Tags:    

Similar News