ஆன்மிகம்
தங்க கொடிமரத்தில் கருடபட கொடி ஏற்றப்பட்ட போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-22 02:36 GMT   |   Update On 2021-03-22 02:36 GMT
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் கொடிப்படம் புறப்பாடும், சிறப்பு பூஜைகளுடன் காலை 5.30 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றமும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திரு சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். இரவு 9 மணிக்கு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளினார். இவ்விழா வருகிற 30-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் நம்பெருமாள் புறப்பாடாகி, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தானமண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

23-ந்தேதி தங்க கருடவாகனத்திலும், 24-ந்தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வரும் 25-ந்தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையைக் கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையாக காட்சியளிப்பார்.

26-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திரு சிவிகையில் புறப்பட்டு கோவில் திரு ்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 27-ந்தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம் (பங்குனிதேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார். வருகிற 28-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நம்பெருமாள் ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

நம்பெருமாள் ரெங்கநாயகி தாயார் சேர்த்திசேவை 28-ந்தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் நடைபெறும். முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 29-ந்தேதி நடைபெறுகிறது.

அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 30-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News