செய்திகள்
மழை

மதுரையில் 6 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

Published On 2021-11-26 07:34 GMT   |   Update On 2021-11-26 07:34 GMT
வைகை அணை நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4435 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மதுரை:

மதுரையில் நேற்று மாலை முதல் இரவு வரை சுமார் 6 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மதுரை சாலைகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியது. எனவே முழுவதிலும் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரா கோட்ஸ் தரைப்பாலம் மற்றும் சிம்மக்கல்- ஆரப்பாளையத்தை இணைக்கும் கர்டர் பாலம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு வெள்ளம் பெருகியது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி இருசக்கர வாகனங்கள் நகர முடியாமல் தவித்தன.

மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்தில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.

மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 121 செ.மீட்டர் அளவில் கனமழை பெய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளந்திரி பகுதியில் 10 செ. மீட்டர் மழையும், குப்பனாம்பட்டியில் குறைந்தபட்சமாக 24 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.

பெரியாறு அணை நீர் மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3623 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

வைகை அணை நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4435 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 5915 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் 5 மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News