செய்திகள்
துணை வேந்தர்களின் பெயர்களை கவர்னர் அவசர அவசரமாக அறிவிப்பது அழகல்ல- துரைமுருகன்
முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை எடுத்து காட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத்தேர்தல் 6.4.2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது.
ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாதம் காலம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்க போகும் துணை வேந்தர்களின் பெயர்களை கவர்னர் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது கவர்னர் பதவிக்கு அழகல்ல.
பல நாட்களாக நிரப்படாமல் இருந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும். இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது.
தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவைகள். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை கவர்னர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்க கூடாது என்பதுதான் எமது கேள்வி.
முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை எடுத்து காட்டப்பட்டுள்ளது. முடிந்தால் கவர்னரின் செயலாளர்கள் கவர்னரின் பார்வைக்கு இதை கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் கவர்னருக்கு அழகல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.