செய்திகள்
கோயம்பேடு புதிய மேம்பாலம் மழையினால் குண்டும் குழியுமாக மாறியுள்ள காட்சி.

பலத்த மழை காரணமாக திறக்கப்பட்ட 10 நாளில் குண்டும் குழியுமாக மாறிய கோயம்பேடு மேம்பாலம்

Published On 2021-11-11 05:03 GMT   |   Update On 2021-11-11 06:33 GMT
ரூ. 94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்தை கடந்த 1-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
சென்னை:

கோயம்பேடு நூறடி சாலை-காளியம்மன் கோவில் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக நூறடி சாலை - காளியம்மன் கோவில், புறநகர் பேருந்து நிலைய நுழைவு வாயிலை இணைத்து மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த மேம்பால பணி கடந்த  டிசம்பர் மாதத்துக்கு பிறகு வேகமாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் அனைத்தும் கடந்த மாதம் முடிவடைந்தது.

ரூ. 94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்தை கடந்த 1-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் பலத்த மழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பால சாலை சேதம் அடைந்து இருக்கிறது. 

சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழையினால் கோயம்பேடு மேம்பால சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. திறக்கப்பட்ட 10 நாட்களில் கோயம்பேடு மேம்பால சாலை சேதம் அடைந்து இருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் ஒருநாள்  மழைக்கே மேம்பால சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்த சாலையை சீரமைத்து தரமற்ற சாலைகள் அமைத்ததற்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News