செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கிடையாது: எடியூரப்பா திட்டவட்டம்

Published On 2021-04-15 02:26 GMT   |   Update On 2021-04-15 02:26 GMT
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தலைநகர் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் இடைத்தேர்தல் முடிவடைந்ததும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியானது.

இதை முதல்-மந்திரி எடியூரப்பா முற்றிலுமாக மறுத்துள்ளார். அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் சில நகரங்களுக்கு இந்த இரவு நேர ஊரடங்கு விஸ்தரிக்கப்படும். ஆனால் எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. அதுகுறித்து அரசு யோசிக்கவே இல்லை.



முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு கொரோனா தடுப்பு நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. நோய் தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளது. வருகிற 18-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளேன். அதில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என்ன ஆலோசனை வழங்குகிறார்களோ அதை ஏற்று செயல்படுத்துவேன். இந்த கூட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கொரானா பரவலை கட்டுப்படுத்துவது என்பது அரசின் பணி மட்டுமல்ல. இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இல்லை. கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் அரசு ஆலோசிக்கவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூறும் ஆலோசனைகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News