செய்திகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்

Published On 2020-03-20 00:06 GMT   |   Update On 2020-03-20 00:36 GMT
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.



குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து, டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேந்தர் ராணா கடந்த 5-ந் தேதியன்று, குற்றவாளிகள் 4 பேரையும் 20-ந் தேதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு புதிய மரண வாரண்டை பிறப்பித்தார்.

இந்த மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, 4 பேர் தரப்பிலும் வக்கீல் ஏ.பி.சிங் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்று தள்ளுபடி செய்தார்.

அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர், தனது கணவர் அப்பாவி என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், கணவருடன் தன்னையும், தனது மகனையும் சேர்த்து தூக்கில் போட வேண்டும் என்று கோரி கதறி அழுததால் மயங்கி விழுந்தார்.



குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதேபோல் இந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் வரவழைத்து மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கோரி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவையும், தன்னுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

கற்பழிப்பு சம்பவம் நடந்த நாளில் தான் டெல்லியில் இல்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை எதிர்த்து முகேஷ் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது.

குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவரது மனைவி புனிதா தேவி, தனது கணவர் இறந்து அதன் காரணமாக தான் விதவையாக வாழ விரும்பவில்லை என்றும், எனவே அவரை தூக்கில் போடுவதற்கு முன்பு தனக்கு விவாகரத்து வாங்கி கொடுக்குமாறும் கோரி அவுரங்காபாத் குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான புனிதா தேவியின் வக்கீல், அக்‌ஷய் குமார் சிங்கை சந்திப்பதற்காக புனிதா தேவி டெல்லி சென்று இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் 19.03.2020 அன்று நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.

நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள்.

குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.

இதனால், வெள்ளிக்கிழமை காலை திஹார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் நேற்று இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் கேட்டார்.

அதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா, உங்களால் வாதிட முடியாது.

நீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்

இதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்.

இதனிடையே பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  தாக்கல் செய்தார்.  மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தனித்தனியே அவர்களுக்கான தூக்கு மேடையில் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் கூறி உள்ளார்.
Tags:    

Similar News