செய்திகள்
சுரேஷ்

போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2021-02-19 18:21 GMT   |   Update On 2021-02-19 20:03 GMT
தக்கோலத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வாலிபருக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை)

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி தக்கோலம் அருகே உள்ள கல்லாறு பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த தக்கோலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ்காரர்கள் கனகராஜ் (40), ராஜன் ஆகியோர் மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது சுரேஷ் திடீரென டிராக்டரை, போலீஸ்காரர் கனகராஜ் மீது ஏற்றினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் ராஜன் காயங்களுடன் தப்பினார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி சீனிவாசன் வழக்கை விசாரித்து சுரேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் சுரேஷ் கதறி அழுதார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவிக்குமார் ஆஜரானார்.
Tags:    

Similar News