உள்ளூர் செய்திகள்
தேர்வு எழுதும் மாணவிகள்.

குமரியில் 85 மையங்களில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள்

Published On 2022-05-05 07:37 GMT   |   Update On 2022-05-05 07:37 GMT
குமரியில் 85 மையங்களில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் : விடைத்தாள் வைக்கப்பட்டுள்ள 4 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ்-2 தேர்வு இன்று நடந்தது. 

குமரி மாவட்டத்தில் 85 மையங்களில் நடந்த தேர்வை 11 ஆயிரத்து 216 மாணவர்களும் 12 ஆயிரத்து56 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 272 பேர் எழுதினார்கள். தேர்வு இன்று தொடங்கி யதையடுத்து மாணவ-மாணவிகள் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வந்தனர்.

தேர்வு மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் அழைத்து வந்திருந்தனர். தேர்வு மையத்திற்கு சென்ற போது மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஆசி வாங்கி விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர்.  தேர்வு மையத்திற்குள் சென்ற  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் அறைக்குள் சென்றனர்.தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு மாணவ மாணவிகள் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தேர்வு மையத்திற்குள் எலெக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வு மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து பள்ளியில் உள்ள அலுவல கத்தில் செல்போன்களை வைத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றனர்.

தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் மற்றும் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் தக்கலை குழித்துறை திருவட்டாறு கல்வி மாவட்டத்திலும் தேர்வை கண்காணிக்க 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். 

முதன்மை கல்வி அதி காரி புகழேந்தி தலைமை யில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேர்வு இன்று காலை தொடங்கியதையடுத்து வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தேர்வுகள் நடந்தது.

தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் நாகர்கோவில் டதி பள்ளிக்கும், தக்கலை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அமலா கான்வென்ட் பள்ளிக்கும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் திருத்துவபுரம் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளிக்கும்,

திருவட்டார் கல்விமாவட்டத்திற்கான விடைத்தாள்கள் படந்தாலுமூடு திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News