உள்ளூர் செய்திகள்
கோவையில் ஒமைக்ரான் பாதிப்பு: முதியவர் குணம் அடைந்தார்
கோவையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் தொற்றில் இருந்து மீண்டார்.
கோவை:
கோவை வடவள்ளியை சேர்ந்த 69 வயது முதியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது மனைவியுடன் லண்டனில் வசித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றார்.
பின்னர் கடந்த 13-ந்தேதி அவர் தனது மனைவி, மகனுடன் லண்டனின் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையில் நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவு கிடைத்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சுகாதாரத் துறை சார்பில் 8-வது நாள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். முதிய வருடன் வந்த அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
பின்னர் முதியவரின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோ தனைக்காக சென்னை மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. . இந்த ஆய்வு முடிவு நேற்று முன்தினம் வந்தது. இதில், அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்படடது.
மேலும் சுகாதாரத்துறையினர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என ஆய்வு மேற்கொண்டு பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல் நபராக ஒமைக்ரான் தொற்று உறுதியாகி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்டார்.
இதையடுத்து அவர் வீடு திரும்பினார். வீட்டில் அவரை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 13 பேரின் மாதிரிகள் பரிசோ தனைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரிய வரும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.