செய்திகள்
புயலால் ஏற்பட்ட பாதிப்பு

அம்பன் புயலால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு - மம்தா பானர்ஜி

Published On 2020-05-22 12:07 GMT   |   Update On 2020-05-22 12:07 GMT
மேற்கு வங்காளத்தில் அம்பன் புயலால் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் கடந்த புதன்கிழமை மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையேயான சுந்தரவன காடுகளையொட்டிய பகுதியில் கரையை கடந்தது.

இந்த புயலால் மேற்கு வங்காள மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயலின் போது கடுமையான காற்று மற்றும் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

புயல் காற்றால் வீடுகள் இடிந்து மேற்கூரைகள் பறந்தன. மேலும், மின்கம்பங்கள் சாய்ந்தன. பேருந்துகள், கார்கள் பைக்குகள் உள்பட பல்வேறு வாகனங்கள் சேதமடைந்தன.

அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 80 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். புயல் மற்றும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். 



இதற்கிடையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிட்டனர். இதன் பின்னர் மேற்குவங்காளத்திற்கு இடைக்கால நிவாரணமாக 1,000 கோடி ரூபாய் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.   

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அம்பன் புயல் மற்றும் கனமழையால் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News