ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்ட போது எடுத்த படம்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டது

Published On 2020-10-14 03:01 GMT   |   Update On 2020-10-14 03:01 GMT
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக புறப்பட்டது. பத்மநாபபுரத்தில் இன்று உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840 ஆம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்பின்பு, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அங்கு நவராத்திரி விழா பூஜையில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகளை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சாமி சிலைகளை கொண்டு செல்வதில் சில மாற்றங்களை தமிழக மற்றும் கேரள அரசுகள் செய்திருந்தன. அதன் அடிப்படையில் நேற்று காலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் அரசு விதிமுறைப்படி முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு பக்தர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், நான்கு ரத வீதிகளிலும் அம்மன் ஊர்வலமாக வீதி உலா வந்தது.

அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. பக்தர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மலர்தூவி அம்மனை வழியனுப்பி வைத்தனர். அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று மதியம் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைந்தது. தமிழக போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.

இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை மாவட்ட கோவில்களின் இணை ஆணையரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலம் நாளை (வியாழக்கிழமை) களியக்காவிளை சென்றடையும். களியக்காவிளையில் கேரள போலீசார் மற்றும் கேரள அதிகாரிகளுடன் சாமி சிலைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

16-ந் தேதி மாலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை ஊர்வலம் சென்றடைகிறது. அங்கு நவராத்திரி பூஜைகள் நடக்கிறது. பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் திருவனந்தபுரத்தில் இருந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.
Tags:    

Similar News