கோவில்கள்
தென்னாங்கூர் பாண்டுரங்க சுவாமிகள் கோவில்

தென்னாங்கூர் பாண்டுரங்க சுவாமிகள் கோவில்

Published On 2022-04-06 01:29 GMT   |   Update On 2022-04-06 01:29 GMT
ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தென்னாங்கூர். எழில் கொஞ்சும் வயல்வெளிகள் நிறைந்து சுற்றிலும் பச்சைபசுமை நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே வின்னை முட்டும் பிரண்மாண்டமான கோபுரத்துடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
 
குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் உருவாக்கப்பட்டு ஆசிரமம் இங்குள்ளது. இத்திருக்கோயில் அருகே உள்ள ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரிசுவாமிகளின் பரமானந்த சீடர்தான் இந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள் ஆவார். அகிலமேங்கும் சுற்றி தன்னுடைய குருஜீ ஞானானந்த சுவாமிகளை பற்றி உபன்யாசம் செய்து உலக மக்களை தனது காந்த குரலால் கவர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்-வந்தவாசி மார்க்கம் அமைந்துள்ள இந்த தென்னாங்கூரில் ஒரு அழகிய ஆசிரமத்தை ஹரிதாஸ் கிரி சுவாமிகள் உருவாக்கினார். இந்த தென்னாங்கூர்தான் குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ ரகுமாயிசமேத பாண்டுரங்க சுவாமிகள் 12 அடியில் பிரம்மாண்டமாக இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
 
இத்திருக்கோயில் கடந்த 1996 ம் வருடம் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2008 ல் 2வதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2020 ல் 3வது முறையாக சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் இத்திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளும், ரகுமாயி தாயாரும் மிகவும் சிறப்பாக அமையப்பட்டு அருள் பாலிக்கிறார்கள்.
 
இந்த திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மிகவும் சிறப்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அன்று பாண்டுரங்க சுவாமிகள் 10,008 பழங்களால் குருவாயூரப்பன் அலங்காரம் (விசு கனி) அலங்காரம் செய்யப்பட்டு மிக பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
 
கண்ணன் அவதார தினமாக கோகுலாஷ்டமி அன்று வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மற்றும் ஒவ்வொரு நாளும் பிண்ணைமரக்கண்ணன் அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம், கோவர்தன கிரி தாரி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம் இவ்வாறு 7 நாட்களும் பாகவத சப்த ஆகம் செய்யப்பட்டு 7 விதமான அலங்காரங்களில் திவ்ய தரிசம் கொடுக்கிறார்.
 
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் போன்று பத்மாவதி கோலமும் திவ்ய தம்பதிகளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதே போன்று ஒவ்வொரு புரட்டாசி சனி அன்று மாலை 6 மணியளவில் பிரம்மாண்டான கருட சேவையும் நடைபெறுகிறது. ஆஷாட (ஆடி) ஏகாதசி காலத்தில் மகா நைவ்வேத்யம் செய்வித்து பக்தர்களுக்கு அன்னதானம் இட்டு பிரம்மாண்டமான நாம சங்கீர்தனத்துடன் விஷேஷ பாலாபிஷேகம் செய்யப்படும்.
 
பிரதி ஞாயிற்றுகிழமைகளில் துவாரகை கண்ணன் போன்று கம்மீரமாக ராஜ அலங்காரத்துடன் தரிசனம் கொடுக்கிறார். மார்கழி பௌர்ணமி காலத்தில் குருநாதர் ஞானானந்த சுவாமிகள் சித்தயான தினத்தன்று 140 கிலோ வெண்ணெய்னினால் மிகவும் அழகான வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
 
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5 மணிக்கு உற்சவர் சொர்க்க வாசல் தரிசனம் பக்தர்களுக்கு அருளிகிறார். 12 அடியில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்க சுவாமிகள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் திருப்பாற்கடலில் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருளிகிறார்.
 
பிரதிமாதம் உத்திரத்டாதி நட்சத்திர தினத்தன்று குருநாதனர் ஹரிதாஹ் கிரி சுவாமிகளால் ஆராதனம் செய்த உற்சவ மூர்த்திகள் பாண்டு ரங்கன் சுவாமிகள் ருக்குமாயி தாயார் ஆகியோர் தங்கதேரில் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
 
இந்த ஆலயத்தில் வைகாநாச ஆகம முறைப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு நடப்பது போன்று தினமும் 6 கால பூஜைகளும் உற்சவங்களும் நடைபெறுகிறது. பாண்டு ரங்க சுவாமிகளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துளசி, சந்தனம் ஆகியவை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
 
கோயில் சிறப்பு

இத்திருக்கோயிலில் அஷ்டபந்தனம் எனும் மூலிகையால் இங்கு மூலவர் சுவாமிளை பிரதிஷ்டை செய்திருப்பதால் ஆண்கண் சட்டையை கழட்டி விட்டு சுவாமியை தரிசிப்பது சிறப்பாகும். ஆலயத்தின் உட்புறம் உலகத்திலேயே முதன்முறையாக கண்ணாடி இழை ஓவியம் (பைபர் கிளாஸ் பெயிண்டிங்) கிருஷ்ணருடைய ராஜ லீலைகள் அனைத்தும் தஞ்சாவூர் சித்திர பாணியில் அமையப்பட்டிப்பது இக்கோயிவில் தனிச்சிறப்பாகும்.
 
இந்த ஆலயத்தில் துவாரபாலகர்கள் திருப்பதி ஆலயத்தில் அமைந்துள்ளது போன்று பஞ்ச லோகத்தில் அமைய பெற்றிருக்கிறார்கள். பாண்டு ரங்க சுவாமிகளுக்கு செய்யப்படும் அலங்காரம் மிகவும் சிறப்பானது. சிவபெருமான் அபிஷேக பிரியர். அதேபோன்று கிருஷ்ணன் அலங்கார பிரியர் அதன் காரணமாக இக்கோயிலின் அலங்காரம் மிக நேர்த்தியாக சிரத்தையுடன் செய்யப்பட்டு பல்வேறு மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
 
ஸ்தல விருட்டம்

இந்த ஆலயத்தின் ஸதல விருட்சமாக தமால விருட்சம் அமையப்பட்டுள்ளது. இந்த மரம் இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் தான் அமைந்துள்ளது. ஒன்று வடநாட்டிலும் மற்றொன்று தென்னாங்கூரிலும் உள்ளது. இந்த மரத்தை சுற்றி வந்து பாண்டுரங்கனை தரிசித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம், திருமண தடை, உத்யோக உயர்வு, வியாபார விருத்தி, குழந்தைகளின் கல்வி மேம்படும் என்பது ஐதீகம்.
 
ஸ்ரீமடம்

இங்கு பாண்டுரங்க சுவாமிகள் கோயிலுக்கு எதிரில் உள்ள ஸ்ரீமடத்தில் குருநாதர் ஞானாந்த கிரி சுவாமிகளுக்கு தனியாக ஆலயமும் உள்ளது. இந்த ஆலத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த சோடஷாக்சரி அம்மாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் நவாவரண பூஜையம் சிறப்பாக நடைபெறுகிறது. குரு ஹரிதாஸ் கிரி சுவாமிகளுக்கு ஸ்ரீமடத்திலேயே அழகிய பிருந்தாவனமும் அமையப்பெற்றுள்ளது. மிகவும் சிறப்பாகும்.
 
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

இத்தனை சிறப்பு மிக்க தென்னாங்கூரிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் உள்ளது. மதுரை மாநாகரில் எழில்மிகு தோற்றத்துடன் மிக பிரம்மாண்டமாக அமைந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய அருளை அளித்துவரும் மதுரை மீனாட்சியம்மன் இந்த தென்னாங்கூரில் தான் பிறந்தார் என்ற ஐதீகமும் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் இங்கு பிறந்ததாலேயே இந்த ஊருக்கு தட்ஷிண ஹாலாட்சியம் என்றொரு பெயரும் உண்டு. இந்த ஆலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர் தன்னித்தனி சந்நதிகளில் அருள் பாலிக்கிறார்கள். மிகவும் அரிதாக காணப்படும் நவக்கிரக மூர்த்திகள் தங்களது பிராட்டிகளுடன் (மனைவிகளுடன்) கூடிய சன்னதி அமையப்பட்டிருப்பது தனித் சிறப்பாகும்.
 
இந்த ஊரின் ஆதிகால சன்னதியான லட்சுமி நாராயணன் சன்னதியும் இவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் பல அறக்கட்டளைக்கு உட்பட்டதாகும். இந்த ஆஸ்ரமத்தில் நிறைய தர்ம காரியங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் அன்னதானம், கோசாலை, முதியோர் இல்லம், இலவச மருத்தும் போன்ற தர்ம காரியங்கள் நடைபெற்ற வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக இங்கு விடுதிகளும் அமைந்துள்ளது.

தரிசன நேரம்

இத்திருக்கோயிலில் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை பாண்டுரங்கசுவாமிகள் ரகுமாயி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News