உள்ளூர் செய்திகள்
கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்று நாடகமாடினேன் - கைதான பெண் வாக்குமூலம்

Published On 2021-12-26 08:22 GMT   |   Update On 2021-12-26 08:22 GMT
கவுண்டம்பாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் துப்பட்டாவால் இறுக்கி தூக்கில் தொங்க விட்டோம் என கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கவுண்டம்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் ராஜா(வயது36). இவர் கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் தங்கி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரீனா(36).

கடந்த 22-ந் தேதி ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரீனா தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும், ராஜா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதும் தெரியவந்தது.

போலீசாருக்கு ராஜாவின் மனைவி ரீனாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

போலீசாரிடம் ரீனா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் இந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

எங்களது வீட்டின் அருகே எனக்கு மாமா முறையான சதீஷ் (39) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அவர் அடிக்கடி அவர் எங்கள் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். நட்பாக தொடங்கிய எங்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 6 ஆண்டுகளாக நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.

இந்த நிலையில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு எங்கள் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் நாங்கள் அடிக்கடி சந்தித்து எங்கள் கள்ளக்காதலை தொடர்ந்தோம்.

கள்ளக்காதல் விவரம் அறிந்த எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறில் ஈடுபடுவதுடன் என்னை அடித்தும் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து எனது மாமாவிடம் தெரிவித்தபோது அவர் எனக்கு சமாதானம் கூறினார்.

சம்பவத்தன்று இரவு எனது கணவர் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது குடிபோதையில் இருந்தார். இது தொடர்பாக எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு எனது மாமா சதீஷ் வீட்டிற்கு வந்து, எதற்காக சண்டை போடுகிறாய் என கேள்வி கேட்டார். அதற்கு அவரிடமும் தகராறில் ஈடுபட்டார். இதனால் வாக்குவாதம் முற்றியது.

தொடர்ந்து இவரது தொல்லை தாங்க முடியாததாலும், எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். உடனடியாக எனது கணவரின் வாயை 2 பேரும் சேர்ந்து பொத்தி அவரை கீழே தள்ளினோம். பின்னர் எனது துப்பாட்டாவால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

இது கொலை என்பது தெரிந்தால் நாம் மாட்டிக் கொள்வோம். அதனால் இதனை நாம் தற்கொலையாக மாற்றி விடுவோம் என எனது எனது மாமா சதீஷ் கூறினார்.

இதையடுத்து நாங்கள் 2 பேரும் சேர்ந்து, கணவரின் கழுத்தில் துப்பட்டாவை கட்டினோம். பின்னர் வீட்டில் உள்ள மின் விசிறியில் அவரின் உடலை தற்கொலை செய்து கொண்டது போல் தொங்கவிட்டோம். உடனடியாக எனது உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்ட நான், எனது கணவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினேன். நான் கூறியதை அவர்களும் நம்பி விட்டனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த தகவலாலும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையிலும் நாங்கள் மாட்டிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற ரீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் சதீஷை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News