துடியலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 18 பவுன் நகை, பணம் திருட்டு
கோவை:
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 50). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
மதியழகன் கடந்த 12-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 5 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மதியழகன் துடியலூர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து போலீசார் வங்கி மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.