உள்ளூர் செய்திகள்
தற்கொலை

விபத்தில் சிக்கி வீடு திரும்பிய சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-16 11:07 GMT   |   Update On 2021-12-16 11:07 GMT
கோவையில் விபத்தில் சிக்கி வீடு திரும்பிய சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கணபதி கணேஷ் லே அவுட் 3-வது வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). சமையல் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

மேலும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் உணவு வாங்குவதற்காக சென்றார். அப்போது அவர் கணபதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவர் தனது மனைவியை அழைத்து தான் விபத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உள்ளார்.

இதைக் கேட்டு பயந்து போன அவரது மனைவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் கண்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து உள்ளார்.

ஆனால் கண்ணன் ஆஸ்பத்திரிக்கு வர மறுத்துவிட்டார். இதனால் அவரது மனைவி வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து கண்ணன் மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தூங்க சென்றார். அப்போது அவரது மனைவி மற்றும் மகன் வெளியே சென்றனர்.

அந்த சமயத்தில் கண்ணன் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய மனைவி மற்றும் மகன், கண்ணன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News