ஆன்மிகம்
வைரவன்பட்டி திருத்தலம்

வைரவன்பட்டி திருத்தலம்- சிவகங்கை

Published On 2020-01-06 01:44 GMT   |   Update On 2020-01-06 01:44 GMT
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகில் உள்ளது வைரவன்பட்டி திருத்தலம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முருகப்பெருமான் ஆலயங்களில், கந்தசஷ்டி அன்று அம்பாளிடம் சிவசக்தி வேல் வாங்கி, கந்தபெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பெருவிழா நடைபெறும். அதுபோல ஆண்டுதோறும் கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியில், சூரபதுமனின் படைத் தளபதிகளான மகாதமிட்டிரன், வக்கிரதமிட்டிரன், கும்பாண்டார் முதலியவர்களை, அம்பாளிடம் சூலம் வாங்கி பைரவர் சம்ஹாரம் செய்யும் பெருவிழா ஒன்று இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகிலுள்ள வைரவன்பட்டி திருத்தலத்தில் ‘சம்ஹார சஷ்டி’ என்ற பெயரில் இந்த விழா நடக்கிறது.

காசிப முனிவருக்கும் - மாயைக்கும் சூரபத்மன், சிங்கன், தாரகன் எனும் மூன்று அசுர புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் கடுந்தவமியற்றி ஈசனிடம் பெருவரங்கள் பெற்றனர். சிவபெருமானிடம் பெற்ற அளவற்ற வரங்களால் தேவருலகையே தங்கள் வலிமையால் ஆட்டிப் படைத்தனர். இதனால் கலக்கமுற்ற தேவர்கள், பூலோகம் வந்து அழிஞ்சல் வனத்தில் ஒளிந்திருந்தனர். ஆயினும் தேவர்கள் மறைந்திருந்த இடங்களைத் தேடிப்பிடித்து அசுரர்கள் அழித்தனர். அசுரர்களின் தொல்லையைத் தாங்கமுடியாத தேவர்கள் அழிஞ்சல் வனத்திலிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, ஈசனிடம் முறையிட்டனர்.

அவர்களுக்கு அபயம் அளிக்க சிவபெருமான், தன்னிலிருந்து பைரவரைத் தோற்றுவித்தார். பைரவரிடம் இருந்து பூதப்படைகள் தோன்றின. அந்தப் பூதப்படைகளுக்கு விநாயகரும், நந்திதேவரும் தலைமை தாங்கினர். போர்க்களத்தில் சூரபத்மனின் படைத் தளபதிகளான மகாதமிட்டிரன், வக்கிரதமிட்டிரன், கும்பாண்டார் முதலியவர்களுடன் கடும்போர் நடைபெற்றது. இறுதியாக இத்தல அழிஞ்சல்வன நாயகியான, வடிவுடை நாயகி அம்பாளிடம் சூலத்தைப் பெறுகிறார் பைரவர். அதனை அசுரர்களை நோக்கி ஏவுகிறார். அது அவர் களைக் கோர்த்துக்கொண்டு இழுத்து வருகிறது.

பைரவர் சூலத்திடம், “அவர்களை மலைகளாக்கிடுக” என ஆணையிடுகிறார். சூலம் அவ்வாறே செய்ய அவர்கள் கீழே விழுந்து மலைகளாயினர். பின்னர் சூலம் அந்த அழிஞ்சல் வனத்தில் இருந்த சிவ தீர்த்தத்தில் மூழ்கி, பைரவரின் திருக் கரத்தை அடைகிறது. தேவர்கள் பைரவரைத் துதித்தனர்.

பைரவரும், “தேவர்களே.. பயப்பட வேண்டாம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறுமுகன் தோன்றி அசுரர்களை அழிப்பான். அதுவரை நீங்கள் அருகிலுள்ள இடத்தில் தங்கியிருங்கள்” என அருளினார். தேவர்கள் அங்கு இளைப்பாறியக் காரணத்தால்தான் அத்தலத்திற்கு இளையாற்றங்குடி என்று பெயர் வந்தது. பின்பு அழிஞ்சல் வனத்தில் இருந்த சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் இடையில் கோவில் கொண்டார் பைரவர். அன்றுமுதல் இந்த அழிஞ்சல் வனம் ‘வைரவன் பட்டி' என வழங்கலாயிற்று.

வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே பைரவரும் தம்மைச் தஞ்சமென்று அண்டிய பக்தர்களை உறுதியாகக் காத்தருள் புரிவார். இத்தல பைரவரை, ‘வைரவர்’ என்றும், ‘வயிரவர்’ என்றும் அழைக்கிறார்கள்.

பைரவருக்கு துணையாக விநாயகரும் இந்தப் போரில் ஈடுபட்டதால், வைரவன்பட்டிக்கு அருகில் பிள்ளையார்பட்டி என்ற ஊரும், கோவிலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பைரவரின் அசுர சம்ஹாரம் முருகப்பெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரத்திற்கும் முன்பே நிகழ்ந்த சம்ணஹாரமாதலால் இதனை ‘சம்ஹார சஷ்டி' என்று அழைக்கின்றனர். பைரவர் இத்தலத்தில் அசுரர்களை அழித்த நாள் கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியாகும். இதனால் கார்த்திகை மாதம் இத்தலத்தில் பைரவருக்கு ‘சம்பக சஷ்டி' எனும் சம்ஹார சஷ்டி விழா நடைபெறுகிறது.

இந்த சம்ஹார சஷ்டி ஐதீக விழாவில் முதலில் விநாயகரும், நந்தியும், துர்க்கையும், இறுதியாக பைரவரும் போருக்கு எழுந்தருளுகின்றனர். பைரவர் அம்பாளிடம் சூலம் பெறுதல், அசுரனை அழித்தல் முதலியன சிறப்பாக நடத்திக் காண்பிக்கப்படுகிறது. வைரவன் பட்டி ஈசனின் திருநாமம் ‘வளரொளி நாதர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம் ‘வடிவுடை நாயகி.’ இங்கு ஈசன் கிழக்கு நோக்கிய வண்ணமும், அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணமும் எழுந்தருளியுள்ளனர். இத்தல இறைவன் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஜோதி வடிவில் அருளியதால் ‘வளரொளி நாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு சுவாமி சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் நடுவில், தெற்கு நோக்கியவாறு பைரவர் எழுந்தருளி உள்ளார். சூலம், நாகம், கபாலம், டமருகம் தாங்கி, பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் பைரவர் வீற்றிருக்கிறார். பைரவரின் முன்னால் பைரவ பீடமும், அதில் பாதுகைகளும், பின்னால் வலப்புறம் நோக்கிய நாய் வாகனமும் அமைந்துள்ளன. ஆலயத்தின் எதிரில் வயிரவ தீர்த்தம் உள்ளது.

அமைவிடம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்பத்தூர் யோகபைரவர் அருளும் திருத்தளிநாதர் திருக்கோவிலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் வைரவன்பட்டி திருத்தலம் அமைந்துள்ளது.

சிவ.அ.விஜய் பெரியசுவாமி
Tags:    

Similar News