செய்திகள்
குலாம் நபி ஆசாத்

தேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது இல்லை- காங்கிரஸ் தலைவர்களை சாடிய குலாம் நபி ஆசாத்

Published On 2020-11-22 14:38 GMT   |   Update On 2020-11-22 14:38 GMT
தேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது இல்லை என கட்சியினரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சாடியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத வகையில் கட்சியானது கீழ்நோக்கி சென்றுள்ளது. கடந்த இரண்டு ஆட்சி காலத்திலும், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை.

அரசியலில் உல்லாசத்திற்காகவும், பணத்திற்காகவும் சேருபவர்கள் வெட்கக்கேடானவர்கள். காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு எதுவும் இல்லை. எதிர்ப்பு எனில் யாரையேனும் நீக்குவது. கட்சி தலைமை பதவிக்கு வேறு வேட்பாளர் யாரும் இல்லை. இது எதிர்ப்பு என்ற ஒன்றில்லை.  சீர்திருத்தங்களுக்கானது ஆகும்.

தேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் இருந்து நடத்தப்படுவது இல்லை. எங்களுடைய கட்சி தலைவர்களிடம் உள்ள பிரச்னை என்னவெனில், அவர்களுக்கு கட்சியிடம் இருந்து தேர்தலில் நிற்க சீட் கிடைத்து விட்டால், முதலில் அவர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கின்றனர்.

சீரற்ற சாலை இருக்கும் பக்கம் அவர்கள் போவது கூட இல்லை. இந்த கலாசாரம் மாறும் வரை நாம் வெற்றி பெற போவதில்லை என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News