செய்திகள்
கோவில்பட்டி சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது
கோவில்பட்டி சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 21-ந்தேதி முதல் திடீரென மாயமானார். பெற்றோர், அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை.
இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த சிறுமியை கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் திருச்சிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
கோவில்பட்டி போலீசார் விரைந்து சென்று திருச்சி முத்தரசநல்லூரில் சிறுமியுடன் பதுங்கி இருந்த அந்த வாலிபரை பிடித்தனர். அந்த வாலிபர் பிடியிலிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர், அந்த சிறுமியையும் வாலிபரையும் போலீசார் கோவில்பட்டிக்கு அழைத்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.