செய்திகள்
மஸ்தான்

வந்தவாசியில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோ கடத்தல்- 2 நபருக்கு வலைவீச்சு

Published On 2020-11-22 11:24 GMT   |   Update On 2020-11-22 11:24 GMT
வந்தவாசியில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்திச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆதம். அவரது மகன் மஸ்தான் (வயது 23), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், அவரிடம் உத்திரமேரூர் அருகில் உள்ள அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டும் என்று கூறி, ஆட்டோவில் பயணம் செய்தனர்.

மங்கநல்லூர் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் திடீரென மஸ்தானை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கரராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த மஸ்தானை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை கடத்தி சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News