செய்திகள்
மயங்க் அகர்வால், கே.எல். ராகுல்

மயங்க் அகர்வால் அதிக ரன், கே.எல். ராகுலுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்த போட்டிகளில் பஞ்சாப் அணியின் முடிவு என்ன?

Published On 2021-09-22 10:48 GMT   |   Update On 2021-09-22 10:48 GMT
கண்ணை மூடிக்கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிதான் வெற்றிபெறும் என ரசிகர்கள் சொல்லக்கூடிய நிலையில் இருந்து, எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 185 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் விளாசினார். கே.எல். ராகுல் 49 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

என்றாலும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், அந்த அணி 2 ரன்னில் தோல்வியை சந்தித்தது. 12 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர்களால் அடிக்க முடியவில்லை. பஞ்சாப் அணி இதுபோன்று முதலில் சிறப்பாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்திப்பது முதல் முறையல்ல. பெரும்பாலான ஆட்டங்களில் இப்படித்தான் தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும், மயங்க் அகர்வால் 2019-ல் இருந்து ஏழு முறை அணிக்காக அதிகபட்ச ரன்கள் சேர்த்தபோது, அந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், கே.எல். ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி நான்கு முறை 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. நான்கு முறையும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News