செய்திகள்
போலி தடுப்பூசி போட்டுக்கொண்ட திரிணாமுல் காங். எம்.பி.க்கு உடல்நலக்குறைவு
தடுப்பூசி போடுவதற்கு மக்களை ஊக்கப்படுத்துவதற்காக, தேவ் நடத்திய முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எம்பி மிமி சக்கரவர்த்தி கூறினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தேபஞ்சன் தேவ் என்பவர், போலி தடுப்பூசி முகாம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்திய முகாம்களில் கொரோனா தடுப்பூசிக்கு பதில், ஆன்டிபயாடிக் ஊசி போட்டது தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தேபஞ்சன் தேவ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிகிறது.
தேபஞ்சன் தேவ் நடத்திய போலி தடுப்பூசி முகாம்களில் ஊசி போட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டப்பட்டு வருகிறது. அவர்களில் தகுதிவாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: போலி தடுப்பூசி முகாம்கள் -முக்கிய குற்றவாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு
இதற்கிடையே, தேபஞ்சன் தேவ் நடத்திய போலி தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்கரவர்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மிமி சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கும் போலி தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிமி சக்ரவர்த்திக்கு நீர்ச்சத்து குறைதல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், ரத்த அழுத்தம் குறைந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மிமி சக்கரவர்த்திக்கு இதற்கு முன்பு பித்தப்பை மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போடுவதற்கு மக்களை ஊக்கப்படுத்துவதற்காக, தேவ் நடத்திய முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், தடுப்பூசி போட்டபிறகு தடுப்பூசி திட்ட இணையதளமான கோவின் மூலம் குறுஞ்செய்தி வராததால் சந்தேகம் ஏற்பட்டதாகவும் மிமி சக்கரவர்த்தி கூறினார்.