செய்திகள்
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி
கடந்த முறை ஐதராபாத் மாநகராட்சியின் 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது.
ஐதராபாத்:
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 150 வார்டுகளில் 149 வார்டுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 55 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 48 வார்டுகளிலும், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற டிஆர்எஸ் கட்சி இந்த முறை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த முறை 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை கூடுதலாக 44 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது.
டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், மேயர் பதவியை பெற முடியாத நிலை உள்ளது. மேயர் பதவியை பெற குறைந்தபட்சம் 67 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே டிஆர்எஸ் மேயர் பதவியை பெற முடியும்.
கடந்த தேர்தலைப் போன்றே 44 வார்டுகளில் வெற்ற பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி, மேயர் பதவியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது.