செய்திகள்
அமெரிக்க ஆளில்லா விமானம் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலி

Published On 2019-09-19 16:58 GMT   |   Update On 2019-09-19 17:16 GMT
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வெளி தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தலிபான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.


அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை அதிக அளவில் அரங்கேற்றி வருகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்ஹர்கர் மாகாணத்துக்குள்பட்ட ஹயானி மாவட்டத்தில் அமெரிக்கப்படைகள் ஆளில்லா விமனங்கள் மூலம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 45-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
Tags:    

Similar News