செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா

தென் மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை - அமித்ஷா

Published On 2021-11-14 19:28 GMT   |   Update On 2021-11-14 20:53 GMT
போதைப் பொருள் பரவலைத் தடுக்க முதல் மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
திருப்பதி:

திருப்பதியில் உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி, உள்துறை செயலாளர் பிரபாகர், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திரா சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா சார்பில் உள்துறை அமைச்சர் முகமது அலி, கர்நாடகா சார்பில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, புதுச்சேரி சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல் மந்திரி ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது: 

தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், மொழிகள் இந்தியாவின் பழமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

தென்னிந்திய மாநிலங்கள் பங்களிப்பு இல்லாத இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்தும் அளிக்கிறது.

இன்றைய தென்னிந்திய மாநில முதல்-மந்திரிகளின் கூட்ட விவரங்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 111 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.  

போதைப்பொருள் பயன்பாடு நமது இளைஞர்களின் வாழ்க்கையையும் திறனையும் அழிக்கும் என்பதால், போதைப்பொருள்களின் அச்சுறுத்தல் மற்றும் பரவலை தடுக்க  முதல்-மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News