செய்திகள்
கோப்பு படம்

வியாபாரி வீட்டில் வருமானவரி அதிகாரி போல் நடித்து ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2020-01-13 09:29 GMT   |   Update On 2020-01-13 09:29 GMT
போரூர் அருகே வியாபாரி வீட்டில் வருமானவரி அதிகாரி போல் நடித்து ரூ.1 லட்சம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் முகமது நூருல்லா. இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்காய மண்டி அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.

இன்று காலை 6.30 மணி அளவில் நூருல்லா வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்து நாங்கள் வருமான வரிதுறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் என்று கூறினர்.

வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தி 10ஆயிரம் மற்றும் 5பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நூருல்லா அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி காரில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

போலீஸ் சீருடையில் வந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News