செய்திகள்
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவருக்கு 3 ஆண்டு ஜெயில்
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை:
சென்னை உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவரது மனைவி அலமேலு (67). இவர்களது மகன் ஆறுமுகம் (47). இவருக்கும் வேட்டவலம் அருகில் உள்ள தாழனூர்சந்து பகுதியை சேர்ந்த நாமகிரி என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஆறுமுகம் அவரது மனைவி நாமகிரிக்கு வரதட்சணை கொடுமை செய்து உள்ளார். இது குறித்து நாமகிரி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த விசாரணை திருவண்ணாமலை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை மாஜிஸ்திரேட்டு கண்ணன் விசாரித்தார். இதில் நாமகிரிக்கு வரதட்சணை கொடுமை செய்த அவரது கணவர் ஆறுமுகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ஆறுமுகத்தின் தந்தை பாலகிருஷ்ணனுக்கும், தாய் அலமேலுவிற்கும் தலா 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறினார்.