உடற்பயிற்சி
நாடிசுத்தி

நுரையீரலுக்கு வலிமை தரும் நாடிசுத்தி

Published On 2022-03-30 02:40 GMT   |   Update On 2022-03-30 02:40 GMT
நாடிசுத்தி செய்வதால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது.
செய்யும் முறை:

பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும்.

நுரையீரல் காற்றால் நிறைந்ததும் இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.

பயன்கள்:-

நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.

இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது.
Tags:    

Similar News