திருமருகல் அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை- வாலிபர் கைது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது (29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை புருசோத்தமன் அனுபவத்தில் வைத்துள்ளார். அங்குள்ள கருவேல மரங்களை வெட்டும் பொழுது ஜெயக்குமார் ஏன் என் இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்து புருஷோத்தமனை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.