செய்திகள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் தேங்காய் நார் தொழிற்சாலைகளுக்கு தடை - கலெக்டரிடம் மனு
காங்கயம் முகாம் மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த நல்லப்பன் என்பவர் கொடுத்த மனுவில், உடுமலை வட்டம் செல்லப்பம்பாளையம் கிராமத்தில் ஒத்திவைக்கப்பட்ட கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
சிவசேனா கட்சியை சேர்ந்த சுந்தரவடிவேலன் கொடுத்த மனுவில், காங்கயம் தாலுகா நத்தகாடையூர், பரஞ்சேர்வழி, மருதுறை, பழையக்கோட்டை, பொன்பரப்பி போன்ற கிராமங்களில் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை பாதிக்கும் தேங்காய் நார் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
காங்கயம் முகாம் மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், திருப்பூர் கோவில்வழியில் இருந்து நல்லூர் வரை நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குண்டும் குழியுமான அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.