செய்திகள்
கடமலைக்குண்டு அருகே உள்ள கெங்கன்குளத்தில் செத்து மிதந்த மீன்களை படத்தில் காணலாம்.

கடமலைக்குண்டு அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்- போலீசார் விசாரணை

Published On 2020-11-27 19:47 GMT   |   Update On 2020-11-27 19:47 GMT
கடமலைக்குண்டு அருகே கெங்கன்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. அந்த நீரில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு:

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் கெங்கன்குளம் உள்ளது. இது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது ஆகும். இந்த குளத்தை குத்தகைக்கு எடுத்து மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை மீன்களை பிடித்து அதனை விற்பனை செய்து வருகிறார். தற்போது கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கெங்கன்குளத்தில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து, மீன்களின் வளர்ச்சியும் அதிகரித்து காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை கெங்கன்குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. மேலும் சில பறவைகளும் இறந்து கிடந்தன. இதனால் குளத்தின் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியது. குளத்தில் மீன் மற்றும் பறவைகள் இறந்து கிடப்பதை கண்ட முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குளத்தில் விஷம் கலந்து மீன்கள் கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே குளத்தில் உள்ள தண்ணீரை மதகு வழியாக வெளியேற்றும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News