செய்திகள்
அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங்

ஒலிம்பிக்: துடுப்பு படகு போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி

Published On 2021-07-25 03:28 GMT   |   Update On 2021-07-25 03:28 GMT
ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட் தகுதிச்சுற்று போட்டிகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில், இந்தியா தரப்பில் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி பங்கேற்றது. தகுதிச்சுற்றின் ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் பங்கேற்கும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும்.

எஞ்சிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றுக்கு செல்லும். ரிபிசேஜ் சுற்றில் முதல் 3 இடங்களுக்குள் நுழைந்தால் அரையிறுதி தகுதிபெறலாம்.

இதனிடையே, ஹீட் தகுதிச்சுற்றில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6:40.33 நிமிடங்களில் அடைந்து 5-ம் இடம் பிடித்தது. இதனால், அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றுக்கு சென்றது. ரிபிசேஜ் சுற்றில் இந்திய அணி 3-ம் இடம் பிடித்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6:51.36 நிமிடங்களில் கடந்து 3-ம் இடம் பிடித்தது.

இதனால், இந்திய அணி ஆண்கள் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டி நாளைமறுநாள் (ஜூலை 27) நடைபெறுகிறது.
Tags:    

Similar News