செய்திகள்
ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் - டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை லண்டனுக்கு புறப்பட இருந்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசியில் பேசிய மர்ம நபர், இரண்டு விமானங்களும் லண்டனுக்கு சென்றடையாது எனக் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.