செய்திகள்
தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி

தெலுங்கானா சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று

Published On 2021-11-25 08:09 GMT   |   Update On 2021-11-25 09:50 GMT
கொரோனா தொற்று உறுதியானதால், சமீபத்தில் தம்மை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடந்த 21-ம் தேதி அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற அவரது பேத்தியின் திருமணத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில், போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து போச்சரம் ஸ்ரீநிவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உடல்நலப் பிரச்சினை எதுவும் இல்லை. மருத்துவர்களின் ஆலோசனையின்படி கச்சிபௌலியில் உள்ள ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோஎன்டாலனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில தினங்களில், என்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு, தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் " என்று பதிவிட்டிருந்தார்.

போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் பேத்தி திருமணத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News