வழிபாடு
நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று தெப்ப உற்சவம்

Published On 2022-02-11 09:08 GMT   |   Update On 2022-02-11 09:08 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. 9-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளன்று நம்பெருமாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணியளவில் வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

9-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News