செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கோவையில் மேலும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்- தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-11-10 11:29 GMT   |   Update On 2021-11-10 11:29 GMT
டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை:

கோவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையால் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த மாத தொடக்கமான 1-ந் தேதியில் இருந்து கடந்த 8-ந் தேதி வரை மட்டும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அவர்கள் வீடுகள், தனியார் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள பாழடைந்த தொட்டி மற்றும் தேங்காய் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா? என ஆய்வு செய்து, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே டெங்குவை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர அதிகாரிகளும் தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிய அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை, சுற்றுப்புறத்தை, நீர் தேங்குவதை தடுப்பதன் வாயிலாக டெங்குவை தடுக்கலாம் என்றனர்.
Tags:    

Similar News