செய்திகள்
தயவுசெய்து இந்த திட்டத்தை நிறுத்தவேண்டாம் -பிரதமருக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்துவிட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கினோம். மத்திய அரசு அதை தடுத்துவிட்டது. நாங்கள் அனுமதி பெறவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை அல்ல 5 முறை அனுமதி பெற்றுள்ளோம். சட்டப்படி மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை, ஆனால் நாங்கள் ஒப்புதல் பெற்றோம்.
டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை (பிரதமர் மோடி) கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம். நாட்டின் நலனுக்காகவே இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். நாட்டின் நலனுக்கான விஷயங்களில் அரசியல் எதுவும் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.