உள்ளூர் செய்திகள்
பஞ்சு இறக்குமதி வரி ரத்தால் ஆடை உற்பத்தி ஆர்டர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நூற்பாலைகள் உற்பத்தியை குறைக்கும் நிலை உருவாகி இருந்தது.
திருப்பூர்:
பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் சீனா மற்றும் இலங்கைக்கான பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை வசப்படுத்த வாய்ப்புள்ளதாக திருப்பூர் தொழில்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
பஞ்சு இறக்குமதி செய்ய வசதியாக 11 சதவீத சுங்க வரியை, செப்டம்பர் 30-ந்தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நூற்பாலைகள் உற்பத்தியை குறைக்கும் நிலை உருவாகி இருந்தது. மத்திய அரசு, சரியான தருணத்தில் பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்கம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பஞ்சில் இருந்து, அதிக நீளமான நூலிழைகள் உற்பத்தி செய்யலாம்.
மீண்டும் நூல் விலை உயர்ந்தால் திருப்பூர் பின்னலாடை தொழில்கள் ஸ்தம்பிக்கும். இக்கட்டான நிலையில் பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.
பஞ்சு இறக்குமதி செய்வதால், நூல் விலை உயர்வு இருக்காது. பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், சீனா, இலங்கைக்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்களை கைப்பற்றவும் அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.