செய்திகள்
கொலை செய்யப்பட்ட விக்னேஷ். கைதான அசோக்குமார்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை - தொழில் போட்டியில் வாலிபர் வெறிச்செயல்

Published On 2021-10-18 10:57 GMT   |   Update On 2021-10-18 10:57 GMT
விக்னேசுக்கும், அசோக்குமாருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
திருப்பூர்

திருப்பூர் முத்தண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் விக்னேஷ் (வயது 25). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சை நிறுத்தி நோயாளிகளை அழைத்து சென்று வந்தார். அதே பகுதியில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அசோக்குமார் (27) என்பவரும் தனியார் ஆம்புலன்சை நிறுத்தி இயக்கி வந்தார். 
 
இந்தநிலையில் விக்னேசுக்கும், அசோக்குமாருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றிரவு அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் விக்னேசை சரமாரி குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.  

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விக்னேசை குத்திக்கொன்ற அசோக்குமாரை கைது செய்தனர்.  

ஆம்புலன்ஸ்களை இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அசோக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உயிருக்கு போராடுபவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று  உயிரை காப்பாற்றி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விக்னேஷ் நேற்று திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் நீண்ட நேரமாக போராடினார். பொதுமக்கள் யாரும் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க முன்வரவில்லை. 

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News