செய்திகள்
1,916 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. கைது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. கே.டி. சிங் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் கே.டி. சிங். முன்னாள் எம்.பி.யான இவர் தொழில்அதிபரும் கூட. பண மோசடி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கே.டி. சிங் வீட்டில் பலமுறை சோதனை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறை, தற்போது கைது செய்துள்ளது.
அல்கெமிஸ்ட் குரூப்பின் நிறுவனரான கே.டி. சிங் 2012 வரை அதன் சேர்மனாக இருந்தார். தற்போது எமிரிடஸ் சேர்மனாக உள்ளார். போன்சி மோசடி வழக்கின் ஒரு பகுதியாக கே.டி. சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு கே.டி. சிங் நிறுவனத்தின் 239 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்தை பறிமுதல் செய்தது, அவருடைய நிறுவனம் 2015-ல் இருந்து முதலீடு திட்டம் மூலமாக பொதுமக்களிடம் சுமார் 1916 கோடி ரூபாய் முறைகேடாக திரட்டியாக குற்றம்சாட்டப்பட்டது. 2016-ல் விசாரணையை தொடங்கியது.
கே.டி. சிங் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 2014 ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கியது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது.
தற்போது திரணாமுல் காங்கிரஸ் கட்சி கே.டி. சிங் உடன் தொடர்பில் இல்லை என் அக்கட்சியின் தலைவர் சௌகாட்டா ராய் தெரிவித்துள்ளார்.